| ADDED : மார் 27, 2024 07:40 AM
புதுச்சேரி : சோலை நகர் வாய்க்காலில் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அருண் (எ) ஞானபிரகாசம், 35; கம்பி கட்டும் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல், சோலை நகர் பகுதியில் சுற்றி வருவது வழக்கம்.கடந்த 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு, தனது தாய் வீரம்மாளிடம் வேலைக்கு செல்கிறேன் என கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற அருண் அழுகிய நிலையில் வாய்க்காலில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து சென்று அருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறுகையில்; அப்பகுதியினர் இயற்கை உபாதை கழிக்க வாய்க்காலுக்கு செல்வது வழக்கம். குடிப்பழக்கம் உடைய அருண் அந்த வழியாக செல்லும்போது தவறி விழுந்திருக்கலாம். அதனால் இறப்பு ஏற்பட்டு இருக்கக் கூடும். பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர். வாய்க்காலில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.