| ADDED : ஜூலை 04, 2024 12:33 AM
வில்லியனுார் : வில்லியனுார் அருகே போதையில், தலையில் கல்லைப்போட்டு நண்பனை கொலை செய்தவருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு கூறியது.புதுச்சேரி வில்லியனுார், கணுவாப்பேட்டை, கப்பகார வீதியை சேர்ந்தவர் அய்யனார் மகன் ராம்குமார், 25; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 2020ம் ஆண்டு செப்., 9ம் தேதி இரவு, ஒதியம்பட்டு நான்கு ரோடு பகுதியில், தலையில் பாறாங்கல்லை போட்டு ராமு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.வில்லியனுார் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், ராமு, அவரது நண்பர் உத்திரவாகினிப்பேட் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் முல்லைவளவன், 26; இருவரும் மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. முல்லைவளவன் அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து ராமு தலையில் போட்டு படுகொலை செய்தது தெரியவந்தது.இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரபீந்திரன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார்.அதில், குற்றவாளி முல்லைவளவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டைன, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.