உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனைத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; முதல்வர் திட்டவட்டம்

அனைத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; முதல்வர் திட்டவட்டம்

புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப அரசு கவனம் செலுத்தி வருவதாக, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா, இ.சி.ஆரில் உள்ள, காமராஜர் மணி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவை முதல்வர் ரங்கசாமி, துவக்கி வைத்து, 21 நல்லாசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி, பேசியதாவது: அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை விரும்பி சேர்க்கும் வகையில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள், சுத்தமான, சுகாதாரமான கழிவறை, போதிய இடவசதி செய்துதர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ கல்வியில் 10 சதவீத இடங்கள் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கும் மருத்துவ இடங்கள் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுச்சேரியில் படித்து செல்லும் மருத்துவ மாணவர்கள் சிறந்த மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள பொறியியல் கல்லுாரிகளில் படித்த பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். புதுச்சேரயின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்கள் உதவுகின்றனர். இதனால் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது. அரசின் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் 256 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து துறையிலும் காலி பணியிடங்களை நிரப்ப அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்பி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவித்தார். விழாவில், செல்வகணபதி எம்.பி., ஜான்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.பாக்ஸ்:வருத்தம் தெரிவித்த முதல்வர்ஆசிரியர் தின விழா காலை 10:30 மணிக்கு துவங்கும் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விருது பெறும், 21 ஆசிரியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், கல்வித்துறை அதிகாரிகள், காலை 10:00 மணிக்கு முன்பே வந்து விட்டனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி, குறிப்பிட்ட நேரத்திற்கு விழாவிற்கு வரவில்லை. மதியம் 12:50 மணிக்கு தான் வந்தார். இதனால் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், விழாவிற்கு தாமதமாக வந்தது குறித்து முதல்வர் மேடையிலேயே வருத்தம் தெரிவித்தார்.அவர் பேசுகையில், விழாவில் ஆசிரியர்களை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டோம். இன்று (நேற்று) முகூர்த்த நாள் என்பதால், பல்வேறு விழாக்களுக்கு செல்லும் போது, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் படி ஆகி விட்டது. இவ்வளவு நேரம் காத்திருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை