| ADDED : ஜூன் 19, 2024 05:30 AM
புதுச்சேரி : அ.தி.மு.க., சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய 40 பெண்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. மின்துறை தலைமை அலுவலகம் எதிரில் போராட்டத்திற்கு, கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க.வினர் கழுத்தில் மின்சார ஒயர்களை மாட்டி கொண்டு, மின்துறை அலுவலக கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னாள் எம்.எல்.ஏ., கோமளா, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, ஜெ பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட 40 பெண்கள் உட்பட 200 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் அன்பழகன் பேசியதாவது; என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு ஆண்டிற்கு 2 முறை மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. தேர்தலில் பா.ஜ., புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அபராத கட்டணம், நிலை கட்டணம், கூடுதல் வரி கட்டணம், காலதாமத கட்டணம் என பல தலைப்புகளில் மின் கட்டணத்தை மக்கள் மீது விதிக்கின்றனர்.புதுச்சேரியில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 150 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும் அல்லது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கவர்னர் உரிய நடவடிக்கை எடுத்து மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வால், அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும். இவ்வாறு அவர் பேசினார்.