புதுச்சேரி : மத்திய அரசின் பட்ஜெட் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் 'பட்ஜெட்' என, முதல்வர், அமைச்சர் புகழாரம் சூட்டினர். முதல்வர் ரங்கசாமி அறிக்கை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2024-25 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதாகவும், நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பிரதமர் மோடியின் உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை மேம்படுத்துவதில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் அர்ப்பணிப்பை காட்டுவதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் உள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான சிறப்பான பட்ஜெட்டினை சமர்ப்பிக்க வழிகாட்டுதலாக இருந்த, பிரதமர் மோடிக்கும், சிறப்பான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த பட்ஜெட்டில், கல்வி பயிலும், மாணவ-மாணவியருக்கு கல்விக்கடன் உதவித்தொகை, ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு, 3 லட்சம் கோடி மற்றும் ஊரக வேலைவாய்ப்பில், ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.1 கோடி இளைஞர்களுக்கு தலைச்சிறந்த நிறுவனங்களில், 12 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மாதாந்திர உதவித்தொகையாக, ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் மேம்பாட்டிற்காக, ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. புதுச்சேரி தே.ஜ., கூட்டணி சார்பிலும், மாநில மக்கள் சார்பிலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகள்' என, தெரிவித்துள்ளார்.