| ADDED : ஜூன் 22, 2024 04:39 AM
புதுச்சேரி : மனதின் கட்டுப்பாட்டில் உடலை கொண்டு வருவதற்கு யோகாவால் மட்டுமே முடியும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று சர்வதேச யோகா தின விழா நடந்தது. இந்த விழாவில் தலைமை தாங்கிய முதல்வர் ரங்கசாமி பேசிய தாவது:நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. நோயற்ற வாழ்க்கைக்கு மிக முக்கியமானது யோகா. மனதின் கட்டுப்பாட்டில் உடலை கொண்டு வருவதற்கு யோகாவால் மட்டுமே முடியும்.இந்த யோகா செயல்விளக்கத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டனர்.யோகாவை கலையாக நினைத்து சிரமம் பாராமல் பயிற்சியில் ஈடுபடும் போது, நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.யோகா செய்பவர்கள் மூச்சுத்திணறல் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள்.சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் எல்லாம் யோகாவின் மூலமாகத்தான் மனதை கட்டுக்குள் வைத்திருந்தனர். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் யோகாவினை கலையாக நினைத்து தினமும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து மாணவர்கள் நாடகம் செய்து காட்டினர். சிறுதானிய உணவு உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கக் கூடியது. உணவுக் கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று. சரியான நிலையில், சரியான நேரத்தில் உணவு உண்பது என்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகா, சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் நமது பிரதமர் மோடி தான் என குறிப்பிட்டார்.