| ADDED : மே 27, 2024 05:12 AM
புதுச்சேரி: வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவியின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை சங்கரதாஸ் சுவாமிகள் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது சஹீர், 35; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த சில வாரத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து முகமது சஹீர் புதுச்சேரி வந்தார். அப்போதும், கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை எழுந்தது. இதனால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது சஹீரை தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் வழக்கறிஞர் என அறிமுகம் செய்து கொண்டார். அப்போது, கணவன் மனைவி இருவரும் சுமூகமாக பிரிந்து செல்லுங்கள் இல்லை என்றால் மீண்டும் வெளிநாடு செல்ல முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார். சந்தேகமடைந்த முகமது சஹீர், தன்னை தொடர்பு கொண்ட மர்ம நபரின் மொபைல் எண்ணை வைத்து விசாரித்தபோது, அது தனது மனைவியின் நண்பரான வாணரப்பேட்டையைச் சேர்ந்த சதாம் நவாஸ் சரீப், 30; என தெரியவந்தது. சதாம் நவாஸ் சரீப்பை தொடர்பு கொண்டு முகமது சஹீர் பேசினார். அப்போது, சதாம் நவாஸ் சரீப் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக முகமது சஹீர் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மிரட்டல் வழக்கு பதிவு செய்து, சதாம் நவாஸ் சரீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.