தொண்டையில் மீன் சிக்கி மீனவர் பலி
தியாகதுருகம் : தொண்டையில் மீன் சிக்கி மீனவர் இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் செல்லமுத்து, 60; மீனவரான இவர் நேற்று முன்தினம் மணிமுக்தா அணையில் மீன் பிடிக்க வீசிய வலையில் சிக்கிய சிறிய மீன் ஒன்றை வாயில் கடித்த படி வலையில் வேறு ஏதேனும் மீன் உள்ளதா என பார்த்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வாயில் வைத்திருந்த மீன் செல்லமுத்து தொண்டைக்குள் சென்று சிக்கியது.இதனால் மூச்சு விட முடியாமல் திணறிய அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று இரவு 8:00 மணிக்கு இறந்தார்.தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.