| ADDED : ஆக 07, 2024 06:12 AM
பாகூர் : அணு ஆராய்ச்சி மைய ஓய்வு பெற்ற ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் பத்மநாபன் 61; மைசூர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் போர்மேனகா பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி, 55. இரண்டு மகள்கள் உள்ளனர். கிருமாம்பாக்கம் அருகே உள்ள சார்காசிமேடு கிராமத்தில் உள்ள பெல்போர்ட் பெலிகான் தனியார் குடியிருப்பு வளாகத்தில், பத்மநாபன் வீடு கட்டி வந்தார். நேற்று முன்தினம் தனது மகள் காயத்ரியுடன் மொபைல் போனில் பேசியபடி பத்மநாபன், மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுத்தார். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரது மகள் தொடர்ந்து போனில் அழைத்தும் பத்மநாபன் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த காயத்திரி புதுச்சேரியில் உள்ள தனது பெரியப்பா ராஜபக்கிரிசாமிக்கு போன் செய்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்க்குமாறு கூறினார். பதட்டமடைந்த அவர் அங்கு சென்று பார்த்தபோது, பத்மநாபன் இறந்து கிடந்தார். இது குறித்து ராஜபக்கிரிசாமி அளித்த புகாரின்பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.