உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் வீடு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயர்ந்தது:;இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் அறிவிப்பு

புதுச்சேரியில் வீடு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயர்ந்தது:;இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்காக இணை ஒழுங்கு முறைமின்சார ஆணையத்திடம் உத்தேச கட்டண உயர்வை நிர்ணயித்து புதுச்சேரி மின்துறை அனுமதிக்கு அனுப்புகிறது.இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, மின் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. அதன்படி இந்த ஆண்டு 2024-25ம் நிதியாண்டிற்கான வருவாய் தேவை மற்றும் மின் கட்டண நிர்ணயம் செய்ய, புதுச்சேரி மின் துறை விண்ணப்பித்து பரிந்துரை செய்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.அதை ஏற்று தற்போது புதுச்சேரியின் மின் கட்டண உயர்வினை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் அறிவித்துள்ளது.

குடிசைகள்

புதுச்சேரியில் குடிசைக்கு தற்போது ஒரு யூனிட் மின்சாரம் 1.45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது 1.95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் 5.40 ரூபாய் மின்கட்டணத்திற்கு பதில் 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் 6.80 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எச்.டி.,லைன்

வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின் அழுத்த (எச்.டி.,) லைன் கட்டணம் தற்போதுயூனிட்டுக்கு 5.60 ரூபாயில் இருந்து, 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள்

குறைந்த அழுத்த தொழிலகங்களுக்கான கட்டணத்தை 6.35 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 11 கே.வி.,22 கே.வி., அல்லது 33 கே.வி., இணைப்பினை பெற்றுள்ள எச்.டி.,தொழிற்சாலைளுக்கான கட்டணம் 5.45 ரூபாயில் இருந்து 6 ரூபாய்க்கும், 110 கேவி.,132 கே.வி,மின் இணைப்புகளை பெற்றுள்ள இ.எச்.டி.,தொழிற்சாலைகளுக்கான கட்டணம் 5.50 ரூபாயில் இருந்து 6.35 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

சார்ஜ் ஸ்டேஷன்

எலக்ட்ரீக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களுக்கான மின்கட்டணம் முன்பு யூனிட்டிற்கு 5.33 ரூபாய் இருந்தது. இது 5.75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

தெரு விளக்கு

பொது இடங்களில் உள்ள தெரு விளக்குகளுக்கு ஒரு யூனிட்டிற்கு 7.10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை அப்படியே தொடர முடிவு செய்யப்ட்டுள்ளது.

விளம்பர பலகைகள்

சைன் போர்டு, ேஹார்டிங்ஸ் மின் கட்டணம் ஏற்கனவே யூனிட்டிற்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் 9.50 ரூபாயாக உயர்ந்தப்பட்டுள்ளது.

தற்காலிக மின் இணைப்பு 50 சதவீதம் அதிகரிப்பு

வழக்கமாக வீடு, வர்த்தக கட்டங்கள், தற்காலிக மின் இணைப்பு பெற்று பணிகளை ஆரம்பிப்பர். அதன் பிறகு நிரந்தர மின் இணைப்பு பெறுவர். இதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது அதிரடி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக வீட்டிற்கு ஒருவர் தற்காலிக இணைப்பு பெறும் ஒருவர், ஒரு மாத பில் தொகையுடன், அதில் 50 சதவீதம் தொகையை சேர்த்து கட்ட வேண்டி வரும். இந்த கட்டண உயர்வு நாளை 16ம் தேதி முதல் புதுச்சேரியில் அமலுக்கு வருகிறது.

வர்த்தக நிறுவனங்கள், பண்ணைகள் தப்பியது

வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் குறைந்த (எல்.டி.,) மின்னழுத்த இணைப்புகளை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் 6 க்கு பதிலாக 6.50 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் 7.05 கட்டணத்திற்கு பதிலாக 8 ரூபாய் வசூலிக்கவும் மின் துறை பரிந்துரை செய்துள்ளது. 251 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு 7.80 கட்டணத்திற்கு பதிலாக 9 ரூபாய் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதனை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிராகரித்து, பழைய கட்டணத்தை வாங்க உத்தரவிட்டுள்ளது.இதேபோல் மின்சார கட்டணத்தை கோழிபண்ணை, தோட்டக்கலை, மீன் பண்ணைகளுக்கும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டது. அதையும் இணை ஒழுங்குமுறை மின்சாரம் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. பழைய கட்டணமான முதல் 100 யூனிட்டிற்கு 2.25 ரூபாய், 201 யூனிட் முதல் 200 வரை-3.25 ரூபாய், 201 யூனிட் முதல் 300 வரை-5.40 ரூபாய், 301 யூனிட்டிற்கு மேல் 6.80 ரூபாய் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

விவசாயம்

இதேபோல் விவசாயத்தினை பொருத்தவரை மின் கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. அதே நிலையும் இந்தாண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ