உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயம், கள்ளுக்கடை ஏலம் தள்ளாட்டம்

சாராயம், கள்ளுக்கடை ஏலம் தள்ளாட்டம்

புதுச்சேரி, : கிஸ்தி தொகை 5 சதவீதம் உயர்வு காரணமாக மொத்தமுள்ள 110 சாராயக்கடைகளில் ஒன்று கூட ஏலம் போகவில்லை. முதல் நாள் ஏலத்தில் வெறும் 14 கள்ளுக்கடை மட்டுமே ஏலம் போய் உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சாராயக்கடை, கள்ளுக்கடைகள் ஏலம் விடுவது வழக்கம். அதன்படி முதலாம் ஆண்டு எடுக்கப்படும், சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் கூடுதலாக 5 சதவீதம் கிஸ்தி தொகையை செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.

மறு ஏலம்

இதேபோல் அதற்கு அடுத்த ஆண்டுகளில் மேலும் 5 சதவீதம் கூடுதல் கிஸ்தி தொகையும் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். அதன்படி, இந்த புதுப்பிப்பு கிஸ்தி தொகை செலுத்தாவிட்டால் மறு ஏலம் விடப்படும். அதன்படி கிஸ்தி தொகை செலுத் தாத அனைத்து சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளுக்கு மறு ஏலம் மின்னணு முறையில் நேற்று நடந்தது.

சாராயக்கடை

மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை சாராயக் கடைகளுக்கு ஏலம் நடந்தது. ஆனால் சாராயக்கடை உரிமையாளர்கள் ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் புதுச்சேரியில் -85, கள்ளுக்கடை-25 என மொத்தம் 110 சாராயக்கடைகள் முதல் நாளில் ஏலம் போகவில்லை.

கள்ளுக்கடைகளும்தள்ளாட்டம்

மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை கள்ளுக்கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. இந்த கள்ளுக்கடை ஏலமும் தள்ளாட்டம் கண்டது. புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள மொத்தமுள்ள 66 கள்ளுக்கடைகளில் 14 மட்டுமே ஏலம் போனது. 52 கள்ளுக்கடைகள் ஏலம் போகவில்லை. இதேபோல் காரைக்காலில் உள்ள 26 கள்ளுக்கடைகளை எடுக்க யாரும் முன் வராததால் ஒரு கடை கூட ஏலம் போகவில்லை.

பார்டர் கடைக்கு மவுசு

கள்ளுக்கடை ஏலத்திலும் தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள கடைகளுக்கு போட்டி ஏற்பட்டது. அதிகப்பட்சமாக காலாப்பட்டு கள்ளுக்கடை 14 ஆயிரத்தில் இருந்து 70,400 ரூபாய்க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக நல்லவாடு கள்ளுக்கடை 6,420 ரூபாய்க்கு ஏலம் போனது.

குறைகிறது

கலால் துறை 5 சதவீதம் கிஸ்தியை உயர்த்தி ஏலம் விட்டது. ஏற்கனவே நஷ்டம் என்பதால் சாராயக்கடை உரிமையாளர்கள் உயர்த்தப்பட்ட கிஸ்தி தொகையுடன் கடையை ஏலம் எடுத்து நடத்த முன்வரவில்லை.இந்நிலையில் ஏலம் போகாத சாராய கள்ளுக்கடைகளுக்கு 5 சதவீத கிஸ்தி தொகை குறைத்து வரும் 1ம் தேதி மீண்டும் ஏலம் calalauction.py.gov.in. என்ற இணையதளத்தில் மின்னணு முறையில் நடக்கிறது. இதில் அனைத்து சாராயக்கடை, கள்ளுக்கடைகளும் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை