உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு

குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு

பாகூர்: புதுச்சேரியில் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து சவுக்கு பயிருக்கு முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.புதுச்சேரியில் நகர பகுதிகளில் இருந்து தினசரி 300 டன் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. அவை குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, தரம் பிரிக்காமல் குவித்து வைக்கப்பட்டது. 5 லட்சத்து 53 ஆயிரம் டன் அளவிற்கு குப்பைகள் குவிந்தது. குப்பைகளை தீவைத்து எரிப்பதால், காற்று மண்டலம் மாசடைகிறது.இதனிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரியில் குவித்து வைத்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, புதுச்சேரி அரசு, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தி, சென்னையை சேர்ந்த கிரீன் வாரியர் என்ற நிறுவனத்திடம் குப்பையில் இருந்து உரம் உற்பத்தி செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது. அதன்படி, குப்பைகள் தரம்பிரித்து இயற்கை உரமாக மாற்றும் திட்டம் இரண்டு மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டது.இதில், பிளாஸ்டிக், கண்ணாடி ஓடுகள், பீங்கான், இரும்பு என மக்காத குப்பைகளையும், உணவு, பழம், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளையும் பிரிக்கின்றனர். மக்காத பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி விட்டு, மக்கும் குப்பையை இயற்கை உரமாக மாற்றி வருகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட 50 டன் இயற்கை உரத்தை புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. விவசாயிகள் அச்சமின்றி பயன்படுத்தும் வகையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தனது நிலத்தில் பயிரிட்டுள்ள சவுக்கை பயிர்களுக்கு முதன் முறையாக உரத்தை பயன்படுத்தினார்.இது குறித்து அவர், கூறுகையில், 'புதுச்சேரியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில், வின்ரோஸ் கம்போசிடிங் என்ற முறையில் பாக்டிரியாக்களை கொண்டு மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்து, விவசாயத்துக்கு உகந்தது என்று சான்றிதழ் வழங்கி உள்ளது. இதில், நைட்ராஜன், பொட்டாஷ், பாஸ்பேட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளது. முதல் முறையாக 50 டன் உரம் சவுக்கு பயிருக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த உரத்தை பயன்படுத்தலாமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் இருக்கிறது. அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் சவுக்கு கன்றுகளுக்கு உரம் பயன்படுத்தப்பட்டது.நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்கள், வீட்டு தோட்டம், மாடி தோட்டம், காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களுக்கும் இந்த உரத்தை பயன்படுத்தலாம். தினசரி 150 டன் உரம் தயாராகிறது. குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி