| ADDED : ஜூன் 22, 2024 05:00 AM
புதுச்சேரி, : போக்குவரத்திற்கு இடையூறாக மிஷன் வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, அதிகாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மிஷன் விதியில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதுகுறித்து, நகராட்சியினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, உள்ளாட்சி துறை செயற் பொறியாளர் சிவபாலன் முன்னிலையில், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.மேலும், சாலையோரத்தில் இருந்து கடைகளின் விளம்பர போர்டுகள், ஓட்டல், கடைகள் மூலம் வெளியில் வைக்கப்பட்டிருந்த கடை பொருட்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆலயத்தின் எதிரில்கைப்பிடி அகற்ற எதிர்ப்பு
ஆக்கிரமிப்பு அகற்றும்போது ஜென்மராக்கினி மாதா ஆலயத்தின் முன்பு சாய்வு தள மேடையில் இருந்த இரும்பு கைபிடியை அகற்ற முயன்றனர். அங்கு வந்த காங்., கட்சியை சேர்ந்த வக்கீல் பிரதீஷ் இருதயராஜ், இந்த கைப்பிடி ஆலயத்திற்கு வரும் முதியோர்கள், ஊனமுற்றோர்களுக்கு உதவியாக இருப்பதால் அதை அகற்ற வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தார்.மேலும், இங்குள்ள நடைபாதைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது; அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டார். இதுகுறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேராயலய பாதிரியார்கள் ஜெயக்குமார், நேரு, சார்லஸ் உடனிருந்தனர்.