| ADDED : ஆக 19, 2024 05:09 AM
புதுச்சேரி: நீர் நிரம்பி இருக்கும் ஊசுட்டேரியில் படகு சேவையை அதிகரிக்க வேண்டும்.புதுச்சேரி என்றாலே அதனுடைய அழகான கடற்கரையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், இவற்றைத் தாண்டி ரசிக்கப்படும் இன்னொரு விஷயம் இயற்கை எழில் கொஞ்சும் ஊசுட்டேரி. புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் 850 எக்டேரில் பரந்து விரிந்து ஊசுட்டேரியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக நவம்பர் மாதம் முதல் ஊசுட்டேரிக்கு வருகை தருகின்றன. இதனால், பறவைகள் சரணாலயமாகவும் ஊசுட்டேரி அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரி தண்ணீர் ததும்பி ரம்யமாக காட்சியளிக்கிறது. கும்பல் கும்பலாக நீர் கோழிகள் நீந்தி இரைதேடுகின்றன. கூட்டினுள் பசியோடு இருக்கும் குஞ்சுகளுக்காக பெரிய பறவைகள் முகாமிட்டு, மூழ்கி இரைதேடுவது கொள்ளையழகு.இந்த அழகிய காட்சியை காண அதிகாலையிலும், அந்தி வேளையிலும் ஊசுட்டேயில் சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படகு இல்லை. ஒன்றிரண்டு படகுகள் ஒப்புக்கென ஓடிக்கொண்டு இருக்கின்றன. நீண்ட தொலைவு செல்லும் தனி படகுகள் ஏதும் இல்லை.சுண்ணாம்பாறு போன்று நீண்ட தொலைவும் படகுகள் செல்வதில்லை. ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் இறக்கிவிட்டு விடுகின்றனர். இதனால் ஊசுட்டேரி வரும் சுற்றுலா பயணிகள் நொந்துபோய் செல்கின்றனர்.வாய்ப்புள்ள இடங்களில் ஊசுட்டேரியை ஆழப்படுத்தி, அந்த வழித்தடத்தில் நீண்ட தொலைவு செல்லும் படகுகளை இயக்க சுற்றுலா துறையும், சுற்றுலா வளர்ச்சி கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.