| ADDED : ஜூலை 24, 2024 06:41 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சூரமங்கலம் சாராயக்கடை அருகில் உள்ள ஒரு வீட்டு மாடியில் இருந்து துார்நாற்றம் வீசியது. வீட்டிற்கு கீழ் சலுன் கடை வைத்துள்ள கலியபெருமாள் என்பவர் நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், குப்புசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் வீட்டின் மீது செல்லும் மின் கம்பியில் சிக்கி, உடல் கருகி இறந்தது தெரிய வந்தது. அவரது உடல் அழுகி காணப்பட்டது.விசாரனையில் இறந்த வாலிபர் சூரமங்கலம் காலனி, பாடசாலை வீதியைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி, 22, பெயிண்டர் என, தெரியவந்தது. குடிப்பழக்கம் உள்ள இவர், மது குடித்துவிட்டு, அருகில் உள்ள கட்டடங்களின் மாடியில் ஏறி படுத்துக் கொள்வது வழக்கம். அதன்படி கடந்த 16ம் தேதி சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு அருகில் உள்ள வீட்டு மாடியில் துாங்குவதற்காக ஏறி உள்ளார். அப்போது வீட்டின் மாடியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பி அவர் மீது பட்டு, மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.
அன்றே சொன்னது 'தினமலர்'
சூரமங்கலம் சாராயக்கடை அருகில் வீட்டின் மீது செல்லும் உயர் மின் அழுத்த கம்பி உரசி ஏற்கனவே ஒருவர் இறந்துள்ளனர். மின் கம்பியை மாற்றி அமைக்கக் கோரி செப்டம்பர் 25ம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால் மின்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது மீண்டும் ஒரு உயிர் பலியாகி உள்ளது.