புதுச்சேரி: புதுச்சேரியில் பகுதி நேர வேலை என சமூக வலைதளத்தில் வரும் விளம்பரத்தை நம்பி 300க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடியை சைபர் கும்பலிடம் இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் அடையாளம் தெரியாத எண்களில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சீனா, கம்போடியா, நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து பிரபல எம்.என்.சி., நிறுவனங்களின் பெயர்களில் வீட்டில் இருந்து பகுதிநேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என, குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.பின், அவர்களுடைய வீடியோக்களுக்கு லைக் கொடுப்பது, மதிப்புரை செய்வது, ஆன்லைனில் பகிர்வது போன்றவற்றை செய்ய வைத்து ஒரு நாளைக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை வருமானத்தை வங்கி கணக்கில் அனுப்புகின்றனர். ஒரு கட்டத்தில் சைபர் குற்றவாளிகள் நீங்கள் அதிக ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதால் முதலீடு செய்ய வேண்டும். இல்லை எனில் வேலையை தொடர முடியாது என, மிரட்டுகின்றனர்.பின், போலியான வலைத்தளங்களை உருவாக்கி அதில் கணக்கு துவங்க வைத்து, பணத்தை முதலீடு செய்ய வைக்கின்றனர். அவர்களும் முன்பு லாபம் கிடைத்ததால், அதிக அளவில் பணத்தை முதலீடு செய்கின்றனர். பின், அவர்கள் கணக்கில் பெரும் தொகை லாபம் கிடைத்தவுடன், அதனை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது, கணக்கை முடக்கி, வரி செலுத்த வேண்டும் என, கூறுகின்றனர். அவர்கள் கேட்கும் தொகையை கட்டிய பிறகும் லாப பணத்தை தராமல், மோசடி கும்பல் தொடர்பை துண்டித்து விடுகின்றனர். இதுபோன்று, 300க்கும் மேற்பட்டோர் 20 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் வந்துள்ளது. எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளம் மற்றும் ஆன்லைன் மூலம் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று வரும் போலியான விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1930 மற்றும் 0413-2276144, 9489205246 மற்றும் cybercell-py.gov.inதொடர்பு கொள்ளலாம்.