வாய்க்காலில் அழுகிய சடலம் புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி : கருவடிக்குப்பம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, கருவடிக்குப்பம் அருகே வெள்ளவாரி வாய்க்காலில், நேற்று மாலை 6:00 மணியளவில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலறிந்த, லாஸ்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை புதுச்சேரி தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில் இறந்தவர், சோலை நகரை சேர்ந்த வேலு, 50; எனவும், இவர் அடிக்கடி, கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடையில் மது குடித்து வந்ததும் தெரியவந்தது.அவர், 3 நாட்களுக்கு முன், வாய்க்காலில் விழுந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். தகவலறிந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது.
போலீசார் குழப்பம்
வாய்க்காலில் இறந்து கிடந்தவரின் உடல் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ளது என போலீசார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. முதலில், லாஸ்பேட்டை போலீசார், விசாரணை நடத்தினர். பின், இது எங்கள் போலீஸ் ஸ்டேஷன் எல்லை இல்லை. முத்தியால்பேட்டை போலீஸ் எல்லையில் உள்ளது' என, கூறிவிட்டு சென்றனர்.இறுதியில் அது லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லை என்பதை உறுதியானது. அதன் பிறகு லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.