போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
காரைக்கால் : காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்தது தொடர்பாக, திருநள்ளாறு வட்டார காங்., தலைவர் சிவக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.காரைக்கால், திருநள்ளாறு அடுத்த தக்களூர் கிராமத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருலோகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. கோவில், காரைக்குடியை சேர்ந்த நாகராஜ் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் போலியான ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த நித்தியானந்தம், சிவக்குமார் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருநள்ளாறு வெள்ளாழர் தெருவை சேர்ந்த நாதன் என்பவர் திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், திருலோகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்திற்கு கடந்த 2008ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து, திருநள்ளாறு பகுதியில் வசித்த நித்தியானந்தம் என்பவர், திருநள்ளாறு சுப்ராயபுரம் சாலையை சேர்ந்த வட்டார காங்., தலைவர் சிவக்குமார், 57; என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் சிவக்குமார், தனது தாய் மற்றும் உறவினர்கள் பெயரில் பல முறை மாற்றி பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. அதையடுத்து சிவக்குமார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். அதை தொடர்ந்து, சிவக்குமார் தலைமறைவானார். இந்நிலையில், சிவக்குமார் குறித்து விபரம் தெரிந்தால் காரைக்கால் எஸ்.பி., 94892 05353, திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷன் 04368 -236465 ஆகிய எண்களில் தெரிவிக்குமாறும், தகவல் தெரிவிப்பவரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.