| ADDED : ஜன 15, 2024 06:44 AM
அரியாங்குப்பம் : காதலிக்கும்படி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்ததால் மன உளைச்சலில் நர்சிங் கல்லுாரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கம்பன் வீதியை சேர்ந்தவர் வேலன் மகள் விர்ஷினி, 20; இவர் புதுச்சேரி அரசு நர்சிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவரின் துாரத்து உறவினர் வம்பாகீராப்பாளையத்தை சேர்ந்த தேசப்பன் மகன் தமிழரசன், 20; இவர் விர்ஷினியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்தார். தொடர்ந்து தமிழரசன் காதலிக்கும் படி விர்ஷினியை டார்ச்சர் செய்து வந்தார். தமிழரசனிடம் பேசாமல் அவர் விலகி சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நீ என்னிடம் பேசாமல் இருந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என விர்ஷினியை மிரட்டி வந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த விர்ஷினி, கடந்த 31ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கு துண்டிய பிரிவின் கீழ் தமிழரசனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.