| ADDED : ஜன 20, 2024 06:04 AM
புதுச்சேரி : முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு குறித்த விழிப்புணர்வு காரணமாக காய்ச்சல் ஏற்பட்ட 3வது நாளில் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்ளப்படுவதால், டெங்கு காய்ச்சலை கண்டறிந்து சிகிச்சை துவக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் காங்., கட்சி மேலிட பொறுப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, காரைக்கால் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரி வந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கமலக்கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த தட்டனுக்கள் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறைந்து வருவதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.