| ADDED : மார் 11, 2024 05:44 AM
திருக்கனுார் : கொடுக்கூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கியது. 8ம் தேதி பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை, நேற்று முன்தினம் காலை கொரைக்கூடை வீதியுலா, இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல், ரணகளிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.முக்கிய நிகழ்வாக, நேற்று மதியம் 12:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானத்திற்கு சென்று, மயான கொள்ளை உற்சவம் நடந்தது. கொடுக்கூர், சுற்றியுள்ள பல கிராம பக்தர்கள் உணவுப் பொருட்கள், காய்கறி வகைகள், பணம் உள்ளிட்டவைகளை மயானக் கொள்ளையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.