கேந்திர வித்யாலயா கலைப்போட்டி 239 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த கேந்திர வித்யாலயா பள்ளி களுக்கு இடையிலான கலைப்போட்டியில், 239 மாணவர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.கேந்திரிய வித்யாலயா சங்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும், இந்திய கலை மற்றும் கலாசாரத்தை பாராட்டவும், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் பல்வேறு கலைப்போட்டி மற் றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் உள்ள, கேந்திர வித்யாலயா பள்ளியில், இந்தாண்டிற்கான, கிளஸ்டர் அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. இதில் குழு நடனம், குழு பாடல், கலைப் பொருட்கள் காட்சி, ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் சென்னை கிளஸ்டர் அளவில், ஆறு கேந்திர வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த மொத்தம், 239 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தலைமை விருந்தினராக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்கள், சென்னை மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.