| ADDED : பிப் 01, 2024 11:29 PM
புதுச்சேரி: போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க தமிழக போலீசாருடன் இணைந்து புதுச்சேரி போலீசார் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரி, கோரிமேடு மைதானத்தில் 500 ஊர்க்காவல் படை வீரர்களுக்கான உடற் தகுதி தேர்வு நேற்று துவங்கியது. அமைச்சர் நமச்சிவாயம் துவங்கி வைத்து, கூறியதாவது:புதுச்சேரி அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு காலிப் பணியிடங்களை நிரப்புகிறோம். காவல்துறையில் முதல் கட்டமாக 390 காவலர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. 253 பேர் இரண்டாம் கட்டமாக தேர்வாகி பயிற்சியில் உள்ளனர். ஊர்க்காவல் படையில் 500 பேரை தேர்வு செய்ய உடல்தகுதி தேர்வு தொடங்கியுள்ளது. 23 நாட்களுக்கு நடக்கிறது. நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்படும். விரைவில் மீதமுள்ள டெக் ஹேண்டலர், 200 ஹோஸ்டல் ஹோம்கார்டு மற்றும் 61 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்படும். காவலர்களுக்கான பதவி உயர்வு மற்றும் கருணை அடிப்படையில் வேலை போன்ற காவலர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு கஞ்சா சப்ளை செய்பவர்களை காவல் துறை கைது செய்து வருகின்றனர். போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க தமிழக போலீசாருடன் குழுவாக இணைந்து புதுச்சேரி போலீசார் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்கள் சரி செய்யப்படும். காவல் நிலையங்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களில் 3 கோடி ரூபாயில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது' என்றார்.
'பணம் கொடுத்து
ஏமாற வேண்டாம்'அமைச்சர் நமச்சிவாயத்திடம், காவலர் பணியை பெற்றுத்தருவதாகக் கூறி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பணம் பெற்று தந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதே என, கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அனைத்து அரசு பணிகளும் தகுதி, திறமை அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. அரசு பணிக்காக யாரிடமும் பணம் தந்து ஏமாறாதீர்கள். புகார் தொடர்பாக விசாரணை நடத்த டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையிருந்தால் புகாரில் சிக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாரேனும் ஏமாந்திருந்தால் ஆதாரத்தோடு புகார் தரலாம்' என்றார்.