| ADDED : டிச 12, 2025 05:37 AM
புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை குழந்தை நல மருத்துவத்துறை சார்பில், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு வளாகத்தில் 'பேரமுது தாய்ப்பால் மையம்' புதிதாக துவங்கப்பட்டுள்ளது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமையில் பேரமுது தாய்ப்பால் மையம் திறந்து வைக்கப்பட்டது. செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக் குநர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், சஞ்சய், மருத்துவ கண்கானிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் கிரிஜா, துணை டீன் சவுந்தர்யா, குழந்தை நலத்துறைத் தலைவர் பரத்குமார், பதிவாளர் தட்சிணாமூர்த்தி, துணை பதிவாளர் ராஜ்குமார், பேராசிரியர் அருள்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர். பேரமுது தாய்ப்பால் மையத்தில் தாய்மார்கள் தானமாக வழங்கும் தாய்ப்பால் நுணுக்கமாக சுத்திகரிக்கப்பட்டு தேவையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் நோய் தொற்று, குடல் சிதைவு, உணவு ஒவ்வாமை போன்றவற்றைத் தவிர்க்க உதவுகிறது. தங்களது குழந்தைக்கு மருத்துவ காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். மேலும் பல தாய்மார்கள் தாய்ப்பாலை தானம் செய்து பிற குழந்தைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என, இயக்குநர் காக்னே, கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.