பெட்ரோல் குண்டு வீசி ஒத்திகை: 4 பேர் சிக்கினர்
வில்லியனுார்: புதுச்சேரி, வில்லியனுார் அருகே அரசூர் கிராம அரசு துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் வெளியே வந்ததை கண்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனுார் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில், சுல்தான்பேட்டை முகமதியா நகரை சேர்ந்த முகமது ஷமீர், 20, அரசூர் குளத்துமேடு தனுஷ், 22, ஸ்ரீராம், 22, ஜி.என்.பாளையம் சுபாஷ் சந்திரபோஸ், 27, ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.முகமது ஷமீர் மீது போக்சோ வழக்கு உள்ளது. இந்த வழக்கில் சிக்க வைத்த நபரை கொலை செய்யும் நோக்கில், போதை தலைக்கேறியதும், தன் பைக்கில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோல் பிடித்து, பெட்ரோல் குண்டு தயாரித்து, அரசு பள்ளி சுவரில் வெடிக்க செய்து ஒத்திகை பார்த்துள்ளனர்.சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்ததால் முகமது சமீர் உள்ளிட்ட நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.