தேங்கா#த்திட்டு துறைமுக முகத்துவாரம் தூர்ந்ததால் படகுகள் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவிப்பு
புதுச்சேரி : மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தில் மண் மேடிட்டுள்ளதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி, அங்கிருந்து சென்று கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.துறைமுகத்திலிருந்து கடலுக்கு செல்லும் முகத்துவாரத்தில் விசைப்படகுகள் செல்ல முடியாத அளவிற்கு அதிக அளவு மண் சேர்ந்து தூர்ந்துள்ளதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக படகுகள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி செல்லும் படகுகள், மணல் மேட்டில் சிக்கி பலத்த சேதமடைகின்றன.இதனால் துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் மீன் வளத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்காலிகமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பொக்லைன் மற்றும் ஜே.சி.பி., மூலம் முகத்துவாரத்தின் கரையோரப் பகுதியில் மட்டும் தூர்வாரும் பணி நடந்தது.முகத்துவாரத்தின் நடுப்பகுதிக்கு பொக்லைன் இயந்திரம் செல்ல முடியாததால், அங்கு தூர்வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தேங்காய்திட்டு விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் சந்திரன் கூறியதாவது:ஜே.சி.பி.,மூலம் முகத்துவாரத்தை தூர்வார முடியாததால் கடந்த ஒரு வாரமாக விசைப்படகுகள் 'கடலுக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து இன்று(17ம் தேதி) அனைத்து மீனவர் கிராமங்களின் பிரதிநிதிகள் மீண்டும் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளோம்' என்றார்.