மேலும் செய்திகள்
ஆம்னி பஸ்கள் இயக்கம் சீர்திருத்தங்கள் அவசியம்!
27-Oct-2025
புதுச்சேரி: ஆம்னி பஸ்களில் பார்சல் ஏற்றி செல்வது நிறுத்தப்பட்டதால், புதுச்சேரியில் இருந்து ஆந்திராவிற்கு நேற்று ரயிலில் சண்டைக்கோழிகள் அனுப்பப்பட்டன. ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மகா சங்கராந்தி பண்டிகை தினத்தன்று கோழிச் சண்டை பந்தயங்கள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்த கோழிச் சண்டையில் ரூ.400 கோடி வரை பந்தயம் கட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கோழிச்சண்டை பந்தயத்திற்கு ஆந்திராவில் தடை இருந்தாலும், போலீசாரால் தடுக்க முடியவில்லை. இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சங்கராந்தி விழா கோழிச் சண்டை பந்தயத்திற்காக நாடு முழுவதும் இருந்து சண்டைக் கோழிகள் ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே போல் புதுச்சேரியில் இருந்தும் சண்டைக்கோழிகள் விலைக்கு வாங்கப்பட்டு சில மாதங்களாக ஹைதராபாத்திற்கு ஆம்னி பஸ்களில் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த அக்.24ம் தேதி ஹைதராபாத் கரனுால் மாவட்டத்தில் நடந்த ஆம்னி பஸ் தீ விபத்தில் 20 பயணிகள் தீயில் கருகி பலியாகினர். இந்த விபத்திற்கு, பஸ்சில் இருந்த 234 'மொபைல் போன்'களின் லித்தியம் பேட்டரிகள் வெடித்து சிதறியதே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு செல்லும் ஆம்னி பஸ்களில் பார்சல் ஏற்றுவதை தனியார் பஸ் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. அதையொட்டி வழக்கமாக பஸ்ஸில் சென்று கொண்டிருந்த சண்டைக் கோழிகள் நேற்று புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பப்பட்டது. இதில், அட்டைப்பெட்டியில் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த ரூ.30,000 மதிப்புள்ள 6 சண்டை கோழிகள் அனுப்பப்பட்டது.
இக்கோழிகளை வாங்கிச் செல்வோர், ஒரு மாதத்தில் கோழிக்கு சண்டை பயிற்சி அளிக்கின்றனர். அதன்பின், கோழியின் பின்புற காலில் சிறிய ரக கத்தியை கட்டி எதிரி கோழியுடன் பல லட்சம் ரூபாய் பந்தயம் கட்டி சண்டையிட விடுவர். இதில் தோல்வி அடையும் கோழி அங்கேயே பலியாகிவிடும்.
27-Oct-2025