தொழிற்பேட்டையில் போலீசார் திடீர் சோதனை
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நகரின் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோரிமேடு போலீசார், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி, ஆவணங்களை சரிபார்த்தனர். லாஸ்பேட்டைக்கு செல்வதற்கான, எளிதான வழியாக, இந்த பகுதியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், இங்கு செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதால், போலீசார் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.