சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பாகூர்: பாகூர் அருகே புளிய மரம், வேரோடு பெயர்ந்து, சாலையில் விழுந்ததால், சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பாகூர் பகுதியில், லேசான காற்றுடன் ஒரே நாளில் 8 செ.மீ., மழை பெய்தது. இந்நிலையில், பாகூர் அடுத்த குருவிநத்தம் வாழப்பட்டு சாலையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று, நேற்று அதிகாலை 4:00 மணியளவில், திடீரென வேறுடன் பெயர்ந்து சாலையில் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், அசம்பாவிதம் இல்லை. இதனால், சாலையில் போக்குவரத்து தடைபட்டதால், பாகூர் மாஞ்சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, புளிய மரத்தினை பொது மக்கள் உதவியுடன், இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். இதனால், அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.