உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் யார்? இறுதி முடிவு எடுக்கப்படாமல் முடிந்தது கூட்டம்

புதுச்சேரியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் யார்? இறுதி முடிவு எடுக்கப்படாமல் முடிந்தது கூட்டம்

புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி காங்., தேர்தல் குழுவின் கூட்டம், மாநில காங்., தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.புதுச்சேரிக்கான காங்., பொறுப்பாளர் அஜோய்குமார், வேட்பாளர் தேர்வு குழுவின் தலைவர் ஹரிஷ் சவுத்ரி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான்,ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், நீல கங்காதரன் மற்றும் இளைஞர் காங்., மகளிர் காங்., மாணவர் காங்., ஆகிய அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் 16 பேரும் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் மவுனம்

கூட்டத்தில், நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் காங்., கட்சியின் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. தற்போதைய எம்.பி., வைத்திலிங்கத்திற்கே மீண்டும் சீட் தரலாம் என முன்னாள் அமைச்சர் கந்தசாமி கூறினார். அதேசமயம், வேட்பாளர் விஷயத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் மவுனம் சாதித்தனர்.கந்தசாமி கூறியதை சில நிர்வாகிகள் ஆதரித்தபோதும், 'தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு இணையாக செலவு செய்ய வேண்டும்; தாராளமாக செலவு செய்யும் வேட்பாளரை நிறுத்த வேண்டும்' என வலியுறுத்தினர். கட்சி தலைமையும் நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.மேலும், காங்., - தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்றும், கூட்டணியில் புதுச்சேரி தொகுதியை காங்., கட்சிக்கு உறுதிப்படுத்திய பின், மறுபடியும் பேசி வேட்பாளரை இறுதி செய்யலாம் எனவும் சிலர் தெரிவித்தனர்.

தி.மு.க.,வுடன் மோதல்

புதுச்சேரியில் தி.மு.க.,வினருடன் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மோதல், கருத்து வேறுபாடுகள் தொடர்பாக மேலிட பார்வையாளர்களிடம் காங்., நிர்வாகிகள் விளக்கி கூறினர். இந்த பிரச்னையை தாங்களே பேசி தீர்த்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து, வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு முடிந்தவுடன், தேர்தல் குழு மீண்டும் கூடி பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் போட்டியிடுவாரா?

கூட்டம் முடிந்து வெளியே வந்த மேலிட பார்வையாளர்களிடம், தங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என, இளைஞர் காங்., முன்னாள் தலைவர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், காங்., அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.பின், புதுச்சேரி லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் ராகுல் போட்டியிட வேண்டும் என, இளையராஜா தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ