| ADDED : பிப் 24, 2024 06:40 AM
வில்லியனுார்: வில்லியனுாரில் பேக்கரி பெண் உரிமையாளரிடம் பிரபல ரவுடி போல் பேசி 20 லட்சம் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மடுகரை மெயின்ரோடு, ஏம்பலம் டி.வி., நகர் வஜ்ரவேல்; வில்லியனுார், கூடப்பாக்கம் சாலையில் பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடை வைத்திருந்தார். கடந்த 2020ல் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளியால் வஜ்ரவேல் படுகொலை செய்தனர். தற்போது அவரது மனைவி வள்ளியம்மாள், 46, பேக்கரியை நடத்தி வருகிறார்.கடந்த 20ம் தேதி வள்ளியம்மாளை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், 'நான் தாடி அய்யனார் பேசுகிறேன்; உனடியாக 20 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையெனில் என்னுடைய கூட்டாளிகள் உன்னையும் கொலை செய்துவிடுவார்கள்' என மிரட்டினார்.இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப் பதிந்து, மிரட்டல் வந்த மொபைல் போன் எண் யாருடையது என, விசாரித்தனர். சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே பழக்கடை உரிமையாளரின் மொபைல் எண் என்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பழக்கடைக்கு எதிரே உள்ள பாண்லே பூத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் கல்மேடுபேட்டை சேர்ந்த அரவிந்தன், 25, அவரது உறவினர் வில்லியனுார், பாண்டியன் நகர் துரைராஜ், 38, உதவியுடன் பழக்கடை உரிமையாளர் மொபைல் போனில் பேசி மாமூல் கேட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.