துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது.ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி--20' தொடர் (செப். 9--28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.சீனியர்களுக்கு 'நோ': இத்தொடரில் சீனியர் வீரர்களின் ஆட்டத்தை காண முடியாது. 'டி-20' அரங்கில் இருந்து இந்தியாவின் கோலி, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, சாகிப் அல் ஹசன் (வங்கம்) ஓய்வு பெற்று விட்டனர். பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ரிஸ்வான், 'நடப்பு சாம்பியன்' இலங்கை அணியில் 'ஆல்-ரவுண்டர்' ஏஞ்சலோ மாத்யூஸ் இடம் பெறவில்லை. அனைத்து அணிகளும் இளம் வீரர்களை நம்பி களமிறங்குகின்றன. வருகிறார் சுப்மன்: 'டி-20' உலக சாம்பியனான இந்திய அணி வலுவாக உள்ளது. மூன்று 'டி-20' அணிகளை களமிறக்கும் அளவுக்கு திறமையான வீரர்கள் உள்ளனர். இதனால் தான் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் கூட வாய்ப்பு பெற முடியவில்லை. பிரிமியர் தொடர் அனுபவம், நமக்கு சாதகம். சூர்யகுமார் தலைமை பெரும் பலம். 22 'டி--20' போட்டிகளில் 18ல் வெற்றி தேடித்தந்துள்ளார். இதன் வெற்றி சதவீதம் 81.82. 'மிஸ்டர் 360 டிகிரி' வீரரான இவர், சூறாவளியாக சுழன்று ரன் சேர்ப்பார். துவக்கத்தில் அபிஷேக் சர்மா, புதிய துணை கேப்டன் சுப்மன் கில் களமிறங்கலாம். திலக் வர்மா, 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், 'பினிஷர்' ரிங்கு சிங் என பேட்டிங்கிற்கு பஞ்சமில்லை. கீப்பர்-பேட்டர் இடத்திற்கு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி காணப்படுகிறது. பும்ரா, அர்ஷ்தீப் சிங் வரவால் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. சுழலுக்கு வருண் சக்ரவர்த்தி, குல்தீப் உள்ளனர்.தவிக்கும் பாக்.,: பாகிஸ்தான் அணி சல்மான் அகா தலைமையில் களமிறங்குகிறது. ஷாகீன் ஷா அப்ரிதி, ஹாரிஸ் ராப், ஹசன் அலியின் பந்துவீச்சை அதிகம் சார்ந்துள்ளது. இலங்கை கேப்டன் சரித் அசலங்காவுக்கு குசால் மெண்டிஸ், ஷனகா, பதிரனா, தீக் ஷனா கைகொடுக்கலாம். லிட்டன் தாஸ் தலைமையில் அனுபவம் இல்லாத வங்கதேச அணி களம் காண்கிறது. முஸ்தபிஜுர், டஸ்கின் அகமது கரை சேர்க்க முயற்சிக்கலாம். ஆப்கன் அருமை: சவால் கொடுக்க கூடிய அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது. கேப்டன் ரஷித் கான், நுார் அகமது, நபி, ஜத்ரன், ஓமர்சாய், நவீன்-உல்-ஹக், குர்பாஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இளம் கஜன்பார் 19, ரஷித் உள்ளிட்டோர் 'சுழலில்' மிரட்டுவர். இவர்கள் பெரும்பாலான நாள் ஐக்கிய அரபு எமிரேட்சில் பயிற்சி பெறுவதால், இங்குள்ள சூழ்நிலை நன்கு தெரியும்.இந்திய வம்சாவளி வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் போன்ற 'கத்துக்குட்டி' அணிகளும் உள்ளன. இவர்களுக்கு சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங், பும்ராவின் யார்க்கரை சந்திப்பது புது அனுபவமாக இருக்கும். பைனல் செல்லும் பாதைஎட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளன. * லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். முடிவில் இரு பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் தலா இரு அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும்.* இதில் ஒவ்வொரு அணியும், மீண்டும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். முடிவில் முதல் இரு இடம் பெறும் அணிகள் செப். 28ல் நடக்கும் பைனலில் மோதும்.3 முறை வாய்ப்பு'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் ஒரு முறை (செப். 14) மோதும். அடுத்து 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் இரண்டாவது முறையாக (செப். 21) மோதலாம். இதில் 'டாப்-2' இடம் பிடித்தால், மறுபடியும் செப். 28ல் நடக்கும் பைனல் என, இரு அணிகளும் மூன்றாவது முறையாக மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ரூ. 2.6 கோடிஆசிய கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 2.6 கோடி பரிசு வழங்கப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு, ரூ. 1.3 கோடி கிடைக்கும்.'ஸ்பான்சர்' இல்லைஆன்லைன் சூதாட்ட தடை காரணமாக, இந்திய கிரிக்கெட் அணி 'டைட்டில் ஸ்பான்சர்' ஒப்பந்தத்தில் இருந்து 'டிரீம் லெவன்' விலகியது. புதிய 'ஸ்பான்சர்' ஏல அறிவிப்பு வெளியானது. இதற்கான பணிகள் முடியாத நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் 'ஸ்பான்சர்' பெயர் இல்லாத ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.இதுவரை சாம்பியன்ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்), 'டி-20' முறையில் நடத்தப்படுகிறது.* 'டி-20' முறையில் இந்தியா (2016), இலங்கை (2022) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.* 50 ஓவர் முறையில் இந்திய அணி 7 முறை (1984, 1988, 1991, 1995, 2010, 2018, 2023) சாம்பியன் ஆனது. இலங்கை 5, பாகிஸ்தான் 2 முறை கோப்பை வென்றன.'சிக்சர் மன்னன்' நஜிபுல்லாஅதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் ஆப்கானிஸ்தானின் நிஜிபுல்லா ஜத்ரன் முதலிடத்தில் உள்ளார். இவர், 8 போட்டியில், 13 சிக்சர் பறக்கவிட்டார். அடுத்த நான்கு இடங்களில் ரஹ்மானுல்லா குர்பாஜ் (12 சிக்சர்), இந்தியாவின் ரோகித் (12), கோலி (11), ஹாங்காங்கின் பாபர் ஹயாத் (10) உள்ளனர்.* தற்போதுள்ள இந்திய வீரர்களில் சூர்யகுமார் (8 சிக்சர்), கே.எல். ராகுல் (6) அதிக சிக்சர் விளாசினர்.சாதனை துளிகள்* அதிக ரன் குவித்த வீரர்களுக்கான வரிசையில் இந்தியாவின் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், 10 போட்டியில், ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 429 ரன் எடுத்துள்ளார்.* அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் முன்னிலை வகிக்கிறார். இவர், 6 போட்டியில், 13 விக்கெட் கைப்பற்றினார்.* ஆசிய கோப்பை ('டி-20') அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் கோலி (122* ரன், எதிர்: ஆப்கானிஸ்தான், 2022), ஹாங்காங்கின் பாபர் ஹயாத் (122 ரன், எதிர்: ஓமன், 2016) முதலிடத்தில் உள்ளனர்.* அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் வரிசையில் இந்தியாவின் தோனி (7), யு.ஏ.இ.,யின் ஸ்வப்னில் பாட்டீல் (7) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.* அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் வங்கதேசத்தின் மொர்டசா (3) முதலிடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 முறை, ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.* சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர் பட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2022ல் துபாயில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில், 4 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.* அதிக 'கேட்ச்' செய்த வீரர்கள் வரிசையில் ஹாங்காங்கின் பாபர் ஹயாத், வங்கதேசத்தின் சவுமியா சர்க்கார் (தலா 6 'கேட்ச்') முதலிடத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் கோலி, 4 'கேட்ச்' செய்திருந்தார்.