வேலை வாங்கி தருவதாக ரூ.5.42 லட்சம் மோசடி
வடபழனி, நெற்குன்றம், பாலகிருஷ்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி, 54. இவர், சிவசேனா கட்சி தமிழக முதன்மை செயலர்.இவருக்கு தெரிந்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கலா என்பவர் வாயிலாக, வடபழனி துரைசாமி சாலையைச் சேர்ந்த பார்த்திபன், 55, என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். பார்த்திபன் தனக்கு தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் பழக்கம் உள்ளதாகவும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் கூறுங்கள் வாங்கி தரலாம் என, தண்டபாணியை நம்ப வைத்துள்ளார்.இதையடுத்து, தண்டபாணி மற்றும் அவருக்கு தெரிந்த கீதா, மணிகண்டன், சீனிவாசன், கலா ஆகிய ஐந்து பேருக்கு, மூன்று மாதத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5.42 லட்சம் ரூபாய் பெற்றார்.ஆனால், வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து, கடந்த ஆண்டு அக்., 1ம் தேதி, தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.அதே மாதம் 17ம் தேதி வடபழனி போலீசார் விசாரித்தனர். அப்போது, 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.ஆனால், இன்று வரை பணத்தை திருப்பி அளிக்காததால், வடபழனி போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.