| ADDED : ஆக 18, 2024 12:50 AM
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, களத்துார் ஊராட்சி உள்ளது. அங்கு, 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருடன் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.ஒரே கட்டடத்தில் இயங்குவதாலும், வகுப்பறை சிறிதாக இருப்பதாலும், மாணவ - மாணவியர் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இருந்த பழைய கட்டடம், ஓராண்டுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது.ஆனால், இதுவரை புதிதாக கட்டடம் கட்டப்படவில்லை. புதிய வகுப்பறை இல்லாததால், நெருக்கடியில் படித்து வருவதாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பள்ளிக்கான விளையாட்டு உபகரணங்கள், கணிப்பொறிகள் மற்றும் புத்தகங்கள் போன்றவை வைக்கவும் அறை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக, அவர்களின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்து, கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக, 73.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்காக, திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது என, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.