உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடை அமைக்க முட்டுக்கட்டை; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்

ரேஷன் கடை அமைக்க முட்டுக்கட்டை; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், இலவச வீட்டுமனை பட்டா, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், மழைநீர்கால்வாய் துார்வாரி சீரமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வேலை வாய்ப்பு, கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 186 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஏழு பயனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் செய்ய, ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு, 1.23 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை, கலெக்டர் வழங்கினார். அப்போது, திம்மாவரம், அம்பேக்தகர் நகர் தலைவர் முனியாண்டி மற்றும் கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்த மனு விபரம் வருமாறு:திம்மாவரம் ஊராட்சி, அம்பேத்கர் நகரில், 41 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட, எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்தார். ரேஷன் கடை கட்ட வருவாய்த் துறையினர் நிலம் தேர்வு செய்து, அரசுக்கு அனுப்பி உள்ளனர். ஆனால், நகர் பகுதியில், 1994ம் ஆண்டு திறக்கப்பட்ட படிப்பக கட்டடத்தை இடித்துவிட்டு, ரேஷன் கடை கட்ட வேண்டும் என, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பிரச்னை செய்து வருகிறார். எனவே, வருவாய்த் துறை ஒதுக்கிய இடத்தில், ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பின், மஹாத்மா காந்தி சலவையாளர்கள் நலச்சங்கம் சார்பில், வீட்டுமனை பட்டா மற்றும் மகளிருக்கு இருசக்கர கடன் உதவி வழங்கக்கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில், நலிந்த சலவை தொழிலாளர்கள் 138 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து மனு அளித்து வருவதாகவும், மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.அதோடு, நலிந்த மகளிருக்கு, அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய இருசக்கர கடன் உதவி வழங்க வேண்டும் எனவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு மீது விசாரணை செய்து, மகளிர் திட்ட அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ