மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்களை காண, ஆண்டுதோறும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. அரசுப் பேருந்தில் வரும் பயணியர், சிற்பங்கள் சுற்றிப் பார்த்த பின், ஊர் திரும்ப, பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர்.பேருந்து நிலையத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சிறிய உயர்கோபுர விளக்கு, எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து, நிலைய பகுதி கும்மிருட்டில் மூழ்குவது வாடிக்கை.இப்பகுதி பேருந்து நிலையமாக இருப்பது மட்டுமின்றி, ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாக முகப்பா கவும் உள்ளது.பக்தர்களும் கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மின் விளக்குகள் பழுதடைந்து, பல மாதங்களாக முற்றிலும் இருளாக உள்ளது.பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இருளில் அவதிக்குள்ளாகின்றனர். இருள் சூழ்ந்த அப்பகுதியில், வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.விளக்குகள் அமைக்குமாறு, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை தான் இல்லை.எனவே, சுற்றுலாமுக்கியத்துவம் கருதி, பேரூராட்சி நிர்வாகம், தரமான விளக்குகள் அமைத்து பேருந்து நிலைய இருளைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர்வலியுறுத்துகின்றனர்.