| ADDED : ஜூன் 16, 2024 12:26 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பி.டி.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாய் - தந்தையரை இழந்த 8ம் வகுப்பு மாணவர் தினேஷ் மற்றும் 9ம் வகுப்பு பயிலும் உதயா ஆகியோர், நேற்று காலை கலெக்டர் அருண்ராஜை சந்தித்தனர்.அப்போது, கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருப்பதாக, கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய கலெக்டர், உடனே இரண்டு பேருக்கும் கல்வி கட்டணம் செலுத்துவற்கான ஆணை, பள்ளி சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.தொடர்ந்து, வேண்பாக்கத்தை சேர்ந்த பெற்றோரை இழந்த யாஸ்மின் என்ற மாணவிக்கு, செங்கல்பட்டு தனியார் மகளிர் கல்லுாரியில் படிக்க ஏதுவாக, தனியார் அமைப்புகள் வாயிலாக நிதி பெறப்பட்டு, அதற்கான காசோலையை மாணவியிடம் வழங்கினார்.இந்த நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.