| ADDED : ஜூலை 22, 2024 07:00 AM
திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி, நெம்மேலி செல்லும் சாலையை ஒட்டி, செக்கடிதாங்கல் ஏரி உள்ளது. இதில், இரண்டு பிரதான மதகுகள் மற்றும் மூன்று நீர் பாசன கால்வாய்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக, 200 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. ஏரியின் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்புகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஏரியின் அளவு சுருங்கி வருகிறது.மேலும், ஏரியின் மேற்கு புறத்தில் உள்ள வீடுகள், வணிக கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கிழக்கு மாடவீதிகளில் உள்ள வடிகால்வாய் வழியாக வரும் கழிவுநீர் ஏரியில் விடப்படுகிறது. குப்பையும் கொட்டப்படுகிறது. இதனால், ஏரி நீரின் இயல்பு தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர்வள ஆதாரமும் குறைகிறது. ஏரியில் உள்ள மீன்களும் இறக்கின்றன. எனவே, ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.