கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. அதில், 22 தி.மு.க., கவுன்சிலர்களும், எட்டு அ.தி.மு.க., கவுன்சிலர்களும் உள்ளனர்.நேற்று காலை 11:00 மணிக்கு, நகராட்சி கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டம், தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன், நகராட்சி கமிஷனர் தாமோதரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.கூட்டம் தொடங்கியதும், துர்கா பிரசாத் தலைமையிலான அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் கார்த்திக் மீது முறைகேடு மற்றும் ஊழல் புகார் தெரிவித்தனர்.அதற்கு, நகராட்சி தலைவர் கார்த்திக் முறையான விளக்கம் அளிக்காததால், அ.தி.மு.க., கவுன்சிலர் எட்டு பேரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இது குறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் துர்கா பிரசாத் கூறியதாவது:நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளில், தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருகின்றன. அதுபற்றி, நகராட்சி தலைவரிடம் கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை.மேலும், நகராட்சிக்கு உட்பட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை சீரமைப்பு, குப்பை அகற்றம் என, எந்தப் பணியும் செய்யப்படுவதில்லை.எனவே, தலைவர் செய்து வரும் முறைகேடுகளை கண்டித்தும், பாரபட்சமான செயல்பாடுகளை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளோம்.அதுமட்டுமின்றி, நகராட்சிகளின் இயக்குனரை சந்தித்து, புகார் தெரிவிக்கவும் தயாராகி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வெளிநடப்பு குறித்து, நகராட்சி தலைவர் கார்த்திக் கூறியதாவது:நகராட்சியில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும், நகராட்சி மண்டல இயக்குனரின் வழிகாட்டுதலின்படி, முறையாக செய்யப்பட்டு வருகின்றன.இது ஊராட்சி இல்லை. தலைவர் கையொப்பமிட்டு பணம் பெறுவதற்கு. அனைத்து டெண்டர்களும், முறையாக ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகின்றன.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஆதாரங்கள் அற்ற வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்.இவ்வாறு அவர் கூறினார்.