| ADDED : ஜூலை 05, 2024 08:52 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 2024 - 25ம் ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறமையும், ஆர்வமும் உள்ள மூன்று முதல் ஆறு தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவத்தேவையான கோழி கொட்டகை கட்டுமானம், உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவது, நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கு, தமிழக அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை, வங்கி வாயிலாக பயனாளிகள் ஏற்பாடு செய்யவேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும், நான்கு வார வயதுடைய, 250 நாட்டுக்கோழி குஞ்சுகள், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படுகின்றன.கோழி கொட்டகை கட்ட, குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். பயனாளிகள், அந்தந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது தொடர்பாக, கால்நடை நிலையங்களை அணுகி, பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.