திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவே மருந்து விழிப்புணர்வு துவக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று பேசினர்.விழாவில், ஊட்டச்சத்து உணவு சார்ந்த கண்காட்சி அரங்குகள் திறக்கப்பட்டன. விழிப்புணர்வு குறும்படம், உணவே மருந்து சின்னம் மற்றும் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது.அதேபோல், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டம் வாயிலாக, பசியோடு இருப்பவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.இந்த வாகனத்திற்கான போக்குவரத்து பராமரிப்பு செலவாக, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விசுவநாதன் 5.40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர்களிடம் வழங்கினார்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:தமிழகத்தில் மருத்துவத் துறையை பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு புதிய புதிய திட்டங்கள் தொடர்ச்சியாக துவங்கப்பட்டு வருகின்றன.தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள், இன்றைக்கு உலக அளவில் பேசப்படுகின்றன. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட உணவே மருந்து திட்டத்தை, வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில் துவங்கி வைக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.இக்கல்லுாரியில், கொரோனா காலத்தில், 2,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைத்து, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.2021 ஏப்ரல் மாதத்திற்கு பின், தமிழகம் முழுதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உணவு மாதிரிகள் 64,077. அதில், பாதுகாப்பற்ற உணவு மாதிரிகளாக கண்டறியப்பட்டவை 4,160. தரமற்ற உணவு மாதிரிகளாக கண்டறியப்பட்டவை 10,453. தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் மீது, 10,278 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.இந்த வழக்குகளின் அபராதம் வாயிலாக வசூலிக்கப்பட்ட தொகை மட்டும், 9.24 கோடி ரூபாய். குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் 3,042. அதற்காக பெறப்பட்ட அபராதம், 4.82 கோடி ரூபாய்.இவ்வாறு அவர் பேசினார்.அதன்பின், அமைச்சர் அன்பரசன் பேசினார். நிகழ்ச்சியில், கலெக்டர் அருண்ராஜ், உணவு பாகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.