| ADDED : ஜூன் 25, 2024 06:16 AM
மறைமலை நகர் : மறைமலை நகர் என்.ஹெச்., 1 பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 26. சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.விக்னேஷ், கடந்த 11ம் தேதி இரவு நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய பெற்றோர், கடந்த 14ம் தேதி, போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில், மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அதில், கடந்த 11ம் தேதி, கோகுலாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில், நண்பர்களுடன் விக்னேஷ் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், நேற்று விக்னேஷ் நண்பர்கள் இருவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட சண்டையில், விக்னேஷை கொலை செய்து கோகுலாபுரம் ஏரியில் புதைத்தது தெரிய வந்தது.அந்த இரண்டு நபர்களையும் அழைத்துச் சென்று, விக்னேஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் அடையாளம் கண்டனர்.தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், நேற்று மாலை 6:30 மணியை கடந்ததால், இன்று காலை 10:00 மணிக்கு, செங்கல்பட்டு தாசில்தார் முன்னிலையில் உடலைத் தோண்டி எடுக்க உள்ளதாகபோலீசார் கூறினர்.