| ADDED : ஜூன் 11, 2024 07:40 PM
திருப்போரூர்:ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன், 36. இவர், சென்னை பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். நாவலுார் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, அலுவலகத்திற்கு வெளியே வந்தார்.வாடகை கார் முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த போது, அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், சாலையில் நின்ற நிரஞ்சனிடம் பேச்சுக் கொடுத்தபடி, சிறிய கத்தியால் வெட்டி, அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை பறிக்க முயன்றனர்.லேப்டாப்பை நிரஞ்சன் பலமாக பிடித்துக்கொண்டதால், மொபைல் போனை மட்டும் பறித்துக்கொண்டு தப்பினர். நிரஞ்சனுக்கு, தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.அந்த வழியாக சென்றவர்கள், நிரஞ்சனை ஆம்புலன்ஸ் வாயிலாக கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின், மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, தாழம்பூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.