| ADDED : ஜூன் 09, 2024 02:18 AM
சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,200க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.தி.நகர், அடையாறு, தாம்பரம், வடபழனி உட்பட 32 பணிமனைகளில் இருந்து, மாநகர பேருந்துகள் பராமரித்து, இயக்கப்படுகின்றன. பராமரிப்பு, பணியாளர்களுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் முக்கிய பொறுப்பு, கிளை மேலாளர்களுக்கு இருக்கிறது.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:பயணியருக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சில பணிமனைகளில் கிளை மேலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்று சென்றனர்.எனவே, பயணியருக்கு தடையின்றி பேருந்து வசதி அளிக்க, நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணியர் புகாரின் அடிப்படையில் சில பணிமனை மேலாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, ஆதம்பாக்கம், ஆவடி, வடபழனி உள்ளிட்ட பணிமனைகளில், மேலாளர்கள் உட்பட 10 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.