| ADDED : மே 11, 2024 11:39 PM
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி, 1வது வார்டுக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் இணைப்பு சாலை, கடந்த 25 ஆண்டுகளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து இருந்ததால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.சாலை அமைக்க கோரி, அப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், பேரூராட்சி வாயிலாக, கடந்த ஆண்டு 210 மீட்டர் நீளத்திற்கு, 16.80 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் சாலை அமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, டிச., மாதம் சாலை அமைக்கும் பணி நடந்தது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டது. ஆனால், தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை.அதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லியில் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், சாலையில் புழுதி பறப்பதால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.