செயல்படாத நியாய விலை கடை சூனாம்பேடில் 4 மாதமாக அவதி
சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், 40 ஆண்டுகளாக நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.இதில், 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலை கடை செயல்பட்டு வந்ததால், மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மோசமான நிலையில் இருந்தது.இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகி, உணவுப்பொருட்கள் வீணாகின.இதனால் கடந்த ஆண்டு, பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, நியாய விலைக் கடை தற்போது செயல்பட்டு வருகிறது.அத்துடன், காஞ்சிபுரம் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் மதிப்பீட்டில், பழைய நியாய விலை கடை இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டப்பட்டது.கடந்த நவம்பரில் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிந்தன. ஆனால், புதிய கட்டடம் 4 மாதங்களாக செயல்படாமல், காட்சி பொருளாகவே உள்ளது. இதனால், ரேஷன் பொருட்களை வாங்க நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, செயல்படாமல் உள்ள இந்த புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.