| ADDED : ஜூலை 10, 2024 02:00 AM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி, பூயிலுப்பை கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உட்பட, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்து, 100 நாள் வேலை திட்ட பணி வழங்கக்கோரி, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.இந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ், வேலை அட்டை பெற்று வேலை செய்யும் பயனாளிகளாக உள்ளோம்.எங்கள் வாழ்க்கைக்கான வாழ்வாதாரமாக, 100 நாள் வேலை திட்டத்தையே நம்பி வாழ்கிறோம். தற்போது மழை பெய்து விட்டதால், விவசாய வேலைகளும் இல்லாத நிலை உள்ளது.எனவே, இந்த நிதியாண்டில், மார்ச் இறுதி வரை 100 நாட்களுக்கும் குறையாமல் பணி வழங்கி, எங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற பி.டி.ஓ., சிவகலைச்செல்வன், முதற்கட்டமாக கரும்பாக்கம் ஊராட்சியில், 100 பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு, அடுத்தடுத்து வேலை வழங்கப்படும் என, உறுதியளித்தார். இதை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.