| ADDED : ஜூன் 06, 2024 01:39 AM
செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.இப்பள்ளி அருகில் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில், தினமும் கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.தவிர, தினமும் நுாற்றுக்கணக்கான கல் குவாரி கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், பள்ளி எதிரே பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளதால், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் சாய்ந்த நிலையில் செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, பாலுார் ரயில்வே கேட் அருகிலும், கிராம நிர்வாக அலுவலம் எதிரிலும், சாலையில் இரண்டு அடி ஆழம் வரை பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியில் வாகனங்கள் சாய்ந்த நிலையில் இயக்கப்படுவதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதில் உருவாகும் புழுதி, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.