| ADDED : மே 03, 2024 11:23 PM
மதுராந்தகம்:தேவாத்துார் ஊராட்சியில், அரசு கட்டடங்கள் அருகே, கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவாத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகக் கட்டடம் உள்ள பகுதியில், அப்பகுதி குடியிருப்புவாசிகள், கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதி குடியிருப்புவாசி கண்ணதாசன் என்பவர் கூறியதாவது:தேவாத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, சிலர் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.சாலைப் பகுதிகளில் படுத்து உறங்கும் கால்நடைகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் மற்றும் மாட்டு சாணங்களை, சாலை ஓரம் கொட்டி வருவதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.