| ADDED : ஆக 23, 2024 12:25 AM
திருப்போரூர்:திருப்போரூர் மலைக்கோவில் அடிவாரம் அருகே, பேரூராட்சி சார்ந்த சிறிய கட்டடத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக திருப்போரூர், கண்ணகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.இங்கு, கர்ப்பிணிக்கு தடுப்பூசி, பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஓராண்டுக்கு 197 கர்ப்பிணியர் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த துணை சுகாதார நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் பெண்கள், குழந்தைகள் காத்திருக்க முடியாத சூழல் உள்ளது.இதன் காரணமாக கர்ப்பிணியர் பரிசோதனை செய்ய முடியவில்லை. மேலும், கழிப்பறை, குடிநீர் மற்றும் போதிய படுக்கை, இருக்கை வசதிகள் இல்லை. இதனால், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஒரே நேரத்தில் குவியும்போது சிலர் மருத்துவ அறை உள்ளேயும், பலர் மருத்துவ கட்டடம் வெளியேயும் காத்திருக்கின்றனர்.மேலும், மழை நேரத்தில் கட்டடம் ஒழுகுவதால் மருந்து மாத்திரைகள், ஆவணங்களை பாதுகாப்பதில் மருத்துவ ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, துணை சுகாதார நிலையத்திற்கு போதிய இடவசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து அமைக்க, செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.